Saturday 16 July 2011

மனமும் மந்திரமும் - #3

பரமந்திர விபேதனம்

"பரமந்த்ர விபேதனம் என்றால் என்ன?" என்று பெருமாள் கேட்டிருந்தார். 

நம்மை வேண்டப்படாத பிறத்தியார் ஏவிவிட்ட மந்திரங்களை உடைக்கும் செயலைத்தான் அவ்வாறு குறிப்பிடுவது.

இப்போதெல்லாம் பிரத்யங்கிரா ஹோமங்கள், சத்ருவினாசன ஹோமம் என்று வகை வகையாக, விரிவாக, அதிகமாகச் செய்கிறார்கள்.  லோக§க்ஷமத்துக்காகவோ 'லோகான் ஸமஸ்த சுகினோ பவ'ந்தாக வேண்டுமென்றோ இந்த மாதிரி ஹோமங்கள் செய்யப்படுவதில்லை.  எங்கு பார்த்தாலும் எப்போதும் இந்த மாதிரியான யாக, ஹோமங்களைச் செய்யும்போது தெரிந்தோ தெரியாமலோ யாருமே பாதிப்படையும் சாத்தியக்கூறுகள் இருக்கத்தான் செய்கின்றன. 
இப்படிப்பட்ட மந்திரக் கட்டுக்களையும் சாடுதலையும் உடைப்பது அகற்றுவது ஆகிய வேலைகளுக்கு இந்த மாதிரியான சாதனங்கள் பயன்படும். 
ஆனால் ஒன்று.
பயன்படுத்திக்கொள்வதற்கும் முறைகள் இருக்கின்றன. 

'பரமந்த்ரவிபேதனம்' என்பதன் விளக்கத்தைச் சுருக்கமாகச் சொல்லியிருந்தேன்.  'பிறத்தியார் பிரயோகம் செய்த மந்திரங்களை' என்பதில்தான் அழுத்தம் கொடுக்க வேண்டியுள்ளது.  சிலர் மந்திர உபதேசம் பெற்று மந்திர ஜபங்கள் செய்து உபாசனை அல்லது பூஜைகளைச் செய்வார்கள். இவை அவர்களுக்கு உரிய மந்திரங்கள். அவர்களுக்குச் சொந்தமாக உள்ள யந்திரங்களிலோ அல்லது விக்கிரகங்களிலோ ஆவாஹணம் செய்துவைத்திருப்பார்கள். அல்லது மானச மந்திரங்களாக மனதுக்குள் வைத்திருப்பார்கள்.

சில பொருள்கள் இருக்கின்றன. அவை எந்தவகையான மந்திரங்களையும் குலைத்துவிடும் ஆற்றல் படைத்தவையாக இருக்கும். அவற்றை வைத்திருந்தாலோ, அல்லது நமக்கே தெரியாமல் யாராவது அவற்றைக் கொண்டுவந்து மறைவாக வைத்தாலோ, ஏற்கனவே செய்து வைத்திருக்கிற ஆவாஹணம், ஏற்றி வைத்த உரு எல்லாம் கலைந்துபோய்விடும். சில கோயில்களில் உள்ள மூலமூர்த்திகளுக்கு சான்னித்தியம் குறைந்துபோகவோ அல்லது அறவே இல்லாமல் போகவோ செய்வதும் உண்டு.
இந்த மாதிரியான பொருள்கள் சகட்டுமேனிக்கு எல்லாவற்றையும் குலைத்துவிடக் கூடியவை. 

அப்படியில்லாமல் பிறன் பிரயோகம் செய்து வைத்த மந்திரங்களை மட்டும் உடைப்பதே பரமந்திரவிபேதனம்.

நமக்கு உரிய மந்திரங்கள் எவ்வகையிலும் பாதிப்பு அடையமாட்டா.

Antibiotic மாதிரி. 


உடலைப் பாதிக்காமல் உடலைப் பாதிக்கும் கிருமிகளை மட்டும் அழிப்பதுபோல.

No comments:

Post a Comment