Friday 10 June 2011

இருதலைத் தீ

சிவவாக்கியர் என்னும் சித்தரைப் பற்றி தெரியவில்லையென்றாலும் அவர் பாடிய ஒரு பாடல் ரொம்பவும் பரிச்சயமாக இருக்கும். 

நட்டகல்லைத் தெய்வமென்றே நாலுபுட்பம் சாற்றியே
சுற்றிவந்து மொனமொனன்னு சொல்லும் மந்திரம் ஏதடா
 நட்ட கல்லும் பேசுமோ நாதனுள்ளிருக்கையில்
 சுட்டசட்டி சட்டுவம் கறிசுவையை அறியுமோ

இதுதான் அந்தப் பாடல்.

:-)
இதை வைத்து சிவவாக்கியர் நாத்திகர் என்றும் பொதுவாக சித்தர்களே நாத்திகர்கள்தாம் என்ற கருத்தும் பரவி விளங்குகிறது.  இது பரவ பெரிதும் முயன்றவர்கள் வைதீக பிராம்மணர்கள்.

சிவவாக்கியர் ஐந்நூறு பாடல்கள் பாடியிருக்கிறார்.  பல சுவடிகளை ஆராய்ந்து பார்த்ததில், மொத்தம் ஐந்நூற்றுப் பதினோரு பாடல்கள் தேறுகின்றன.  ஆனால் ஒரு சில சுவடிகளின்படி அவருடைய பெயரால் ஆயிரம் பாடல்கள் வழங்குகின்றன.  அந்த ஆயிரம் பாடல்களின் பார்த்தால் சிவவாக்கியர் சைவரா, வைஷ்ணவரா, அல்லது முஸ்லிமா என்ற சந்தேகம் ஏற்படும்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். 

அவருடைய ஒரு பாடல் இருக்கிறது - 

சிவாயவசி என்னவும் செபிக்க இச்சகம்  எலாம் 
சிவாயவசி என்னவும் செபிக்கயாவும் சித்தியாம்
சிவாயவசி என்னவும் செபிக்கவானம் ஆளலாம் 
சிவாயவசி என்பதே இருதலைத்தீ ஆகுமே

'சிவாயவசி' என்பதும் பஞ்சாட்சரத்தின் மாறல்களின் நிரலில் வரும் ஒரு மந்திரம்.  அதை 'இருதலைத்தீ' என்கிறார் சிவவாக்கியர்.  அந்த மந்திரம் அக்கினியாக விளங்குவது. குண்டலினி என்பதுவும் அக்கினிதானே.

மூலாதாரத்தில் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே 
என்று ஔவையாருடைய விநாயகர் அகவல் கூறுகிறது அல்லவா.

சிவாயவசி என்னும் மந்திரத்திற்கு இருதலைகள் உண்டு. முன்னும் பின்னுமாக இருதலைகள்
அந்த 'சி' என்னும் அட்சரம்தான் 'தலை' எனப்படுவது. 
திருமூலர் இதை 'நாயோட்டும் மந்திரம்' என்பார்.
அகத்தியரில் இருமுறை இந்த நாயோட்டும் மந்திரத்தை ஓட்டிப் பார்த்தாயிற்று.

ஆகம சங்கேத மொழியில் இந்த மந்திரத்தை 'இருதலை மாணிக்கம்' என்று குறிப்பிடுவார்கள்.

ஏலம் விட்ட குருவி -#2

ராதாக்கிருஷ்ணன் குருவிக் கதையின் இரண்டாவது பகுதியைக் கேட்டார்.......
எழுதிட்டாப்போச்சு......
பெரிய கம்பசூத்திரமா என்ன?

ஏலத்தில் எடுத்த அபூர்வ பேசும் மைனாக் குருவியைக் கூண்டில் அடைத்துக்கொண்டு பத்திரமாகப் பெருசு வீட்டிற்குக் கொண்டு சென்றது.  ஐயாயிரம் ரூபாய்க் குருவியாயிற்றே!  அட்டேயப்பா! இப்பேற்பட்ட குருவியைக் காட்டி ஊராங்க்ய, ஒறவுமொறெ, எட்டு வட்டகெ, பதுனெட்டுப் பட்டியெல்லாம் காட்டவேண்டும் என்று பெருசு நினைத்தது.  முதலில் ஆத்தாக் கிழவியை அசர வைக்கவேண்டும் என்று அந்த மைனாக் குருவியைக் கூண்டோடு ஆத்தாக் கிழவி இருக்கும் வீட்டுக்கு அனுப்பிவைத்தது.  இரண்டு நாட்கள் ஒன்றும் சத்தத்தையே காணோம். 

"நாமளே போயிப் பாத்துப்பிட்டு வந்துருவோம். வாரபோது கையோட மைனாக் குருவியக் கொண்டாந்துர்வோம்", என்று பெருசு நினைத்தது. உடன் காரியத்தில் இறங்கியது. 

புதுச்சேரி முதல்வர் என்னார் மாதிரி பொதபொதவென்று தொப்பான் தொப்பான் முக்காக்கைச் சட்டையைப் போட்டுக்கொண்டு, அவர் மாதிரியே நெற்றியில் துண்ணூறு பூசி, அவர் மாதிரியே உச்சந் தலையில் துண்ணூறைக் கொட்டிக்கொண்டு புறப்பட்டது.  ஆத்தாக்காரி வீட்டு வாசல் திண்ணையில். நல்லாக் காலைப் பப்பரபாம் என்று நீட்டி வைத்துக்கொண்டு, பாக்கு உரலில் வெற்றிலையைப் போட்டு இடித்துக்கொண்டிருந்தது. 

"என்னடாப்பா, இந்தப் பக்கமா....? ஙோத்தா உசுரோட இருக்காளான்னு பாத்துப்புட்டுப் போகோணும்னுட்டு வந்தியா? அதுனாலதான இன்னம் இந்த ஊருக்கோடித் தோப்புத்தொரவ கைநாட்டுப் போட்டுக் குடுக்காம இருக்கேன்.... நாம்பொத்த புள்ள கொணம் எனக்குத்தானே தெரியும்?"  


"அட கெழவீ! ஒனக்குக் கூறுகெட்டுப் போச்சு. கொஞ்சங்கூட வெதரணயே இல்ல.  நானு ஒரு குருவிய குடுத்தூட்டனே, அதப் பத்தி வெசாரிப்பம்னுட்டுல்ல வந்தேன். பாத்தியா....
எப்புடி நம்ம குருவி?" 

"உக்கூம்...... பெர்ரீய்ய குருவி.... ஊருல நாட்டுல இல்லாத குருவியாக்கும். எல்லாம் எலும்புங்கிலும்புமா சதெப் பத்தே இல்லாம தொத்தலா இருந்துச்சு. கொஞ்சா நஞ்சங் கறியும் நாறுநாறா இருந்துச்சு. இஞ்ச கெடய்க்காத காடயா கவுதாரியா..... அனுப்பிப்புட்டான்  பேரீய்ய்ய மைனாக் குர்ர்ருவீ......?"