Tuesday 7 June 2011

ஏலம்!

ஓர் ஏலக்கடை.
ஏலம் விடுபவன் கூவிக்கொண்டிருந்தான்:


"மகாஜனங்களே! இப்பொ ஏலம் விடப்போறது ஒரு மைனாக்குருவி. இது சாதா மைனாவோ சோதா மைனாவோ இல்லை. நல்லாப் பேசும். மனுசாளுங்க மாரியே பேசும். இப்ப இத ஏலம் விடப்போறேன்.  முதல் விலைய நானே சொல்லிப்புடுறேன்".   
"அம்பது ரூவா! அம்பது ரூவா! யாரும் மேல சொல்லுறீஹளா?"
"அறுவது ரூவா!"

"ந்தா இஙின நிக்கிற பெரிசு ஒண்ணு அறுவதுக்குக் கேக்குது. அற்வத்! அற்வத்!" எங்கிருந்தோ ஒரு குரல்:
"எழுவது!"

பெரிசு: "எம்பது"

"நூறு!"

பெரிசு:"அடங்க யார்ராவன்? நமக்கு எதுரா ஏலம் சொல்லுறவன்? இந்த எட்டுப்பட்டி பதினெட்டுக்கிராமத்து வட்டஹயில நமக்கு எதுத்தாப்பல எவனும் மூச்சுக் கூட வுடமாட்டாங்ய! யாரோ எதிர்வெல பேசுராப்புல!  டோய்! எவண்டா அவன், கீச்சுக் கொரலுல எதிர் போடுறது? பாரு இப்பவே வெலைய ஏத்துறேன். ***** 
நீ எம்புட்டு ஒசந்தாலும் நான் அதுக்கு மேலயே ஏத்துவேன். இன்னக்கி வுடுறாப்புல இல்லடோய்!  பாத்துப்புடுவம்ங்கிறென். யெறநூறு!"

"ஐந்நூறு!"
பெரிசு: "ஆயிரம்"
"ரெண்டாயிரம்!"

பெரிசு:"அய்யாயிரம். போதுமுய்யா ஏலம். அய்யாயிரத்துக்கே குடு! "

மைனாவைக் கூண்டோடு ஏலக்காரன் பெரிசு கையில் கொடுத்தான்.

பெரிசு:" ஏம்ப்பூ! இந்த மைனாக்குருவி நெசமாலுமே பேசுமாங்குறென்?"

ஏலக்கடைக்காரன்: "பேசுமாவா? இம்புட்டு நேரம் அய்யாவோட எதுத்து ஏல வெல கூவிக்கிட்டிருந்ததே இந்தக் குருவிதானுங்களே!"