Tuesday 6 March 2012

KARUPPANNASAMY AND OTHERS

கருப்பண்ணசாமியும் காவல்தெய்வங்களும்


சில நாட்களுக்கு முன்னர் செரம்பான் என்னும் ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கருப்பண்ண சாமியைப் பற்றி கேட்டார்.
எத்தனை வகையான கருப்பண்ணசாமிகள் இருக்கிறார்கள் என்பது கேள்விகளில் 
ஒன்று.
பெரியகருப்பர், சின்னக்கருப்பர், முத்துக்கருப்பர், வளைதடிக்கருப்பர், சங்கிலிக்கருப்பர், 
ஆத்தியடிக் கருப்பர், கோட்டைக் கருப்பர், பதினெட்டாம்படிக் கருப்பர், கழுவக் கருப்பர், 
கழுவடிக் கருப்பர், மாசாணக் கருப்பர், நொண்டிக்கருப்பர், ராங்கியம் கருப்பர் என்று வரிசையாக 
மனதிற்கு வந்த கருப்பர் பெயர்களைச் சொன்னேன்.
கருப்பரைப் பற்றிய நூல்கள், வலைத்தளங்கள் பற்றி கேட்டார்.
அதிகம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
வலையில் கருப்பண்ணசாமி படமே நான் ஜியோஸிட்டீஸில் போட்டுவைத்திருக்கும் படம்தான். வேறேதும் இருப்பதாகத் தெரிய வில்லை. வேறு இருந்தாலும் இருக்கும்.

"கருப்பரின் அடையாளமாக உள்ளது சூலமா?" என்று கேட்டார்.
"கருப்பருக்கு அரிவாள்தான் நட்டுவைப்பார்கள்; அல்லது நிறுத்திவைப்பார்கள். கருப்பர் 
அரிவாளை வலக்கையில் ஏந்தியிருப்பார். இடக்கையில் சுக்குமாத்தடி என்னும் ஆயுதம் இருக்கும். இடையில் சூரிக்கத்தி என்பது இருக்கும். வளைதடிக் கருப்பர் வளரியை வைத்திருப்பார்", என்று 
விளக்கினேன்.
ஆசாமி வெகு ஸீரியஸாகக் கருப்பண்ணசாமியை முறையாக வழிபடவேண்டும் என்று 
நினைத்துக் கேட்டாரா என்பது தெரியாது. 

அதற்கு அடுத்தநாள்......
கோலாலும்ப்பூரிலிருந்து ஓர் அன்பர் வந்திருந்தார். "நின்னது நிக்க" என்பார்கள் அல்லவா? அதுபோல "சிறு தேவதைகள் பற்றி சொல்லுங்கள்", என்றார்.
'சிறு தேவதைகள்' என்று ஒரு காலத்தில் நானும் குறிப்பிட்டவன்தான். 
ஆனால் ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை நேரில் பார்த்தபிறகு அப்படி யெல்லாம் சொல்வதில்லை.
"அன்றிலிருந்து 'சிறுதெய்வங்கள்' என்று சொல்வதில்லை" என்று சொன்னேன்.
ரொம்பவும் சுவாரஸ்யமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். 
மலேசியாவில் ரொம்பவும் சுவாரஸ்யமாகக் கேட்கும் ஆட்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.
ஆனால் என்ன?
சுவாரஸ்யமான விஷயத்தை சுவாரஸ்யமான முறையில் சொல்லக் கூடிய ஆட்கள்தாம் இல்லை.
அதுவும் சிறுகதை விமரிசனம், நாவல் விமரிசனம், புதுக்கவிதை விமரிசனம் என்று உலர்ந்து 
போய், வெளிறிப் போய், சோணியாய், சோகை பிடித்தமாதிரி உள்ள உரைகள், கட்டுரைகள் மிகவும் அதிகமாகத் திணிக்கப்பட்டு இங்குள்ளவர்கள் வெகுவாகப் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆகையால்தான் சுவாரஸ்யமான விஷயங்களை சுவாரஸ்யமாகச் சொல்லும்போது அவ்வளவு ஆர்வமுடன் கேட்கிறார்கள்.
"அப்படியானால் அந்த தெய்வங்களை எப்படிக் குறிப்பிடுவீர்கள்? கிராம தெய்வமா?" என்று கேட்டார்.
"இங்கு ஏது கிராமம்? 'காவல் தெய்வம்' என்று சொல்ல வேண்டியதுதான்".
"கிராமத்தில் உள்ளதை 'கிராம தெய்வம்' என்று சொல்லலாம்தான்".
"ஆனால் மொட்டைக் கோபுர முனியும் ஜடாமுனியும் 'பப்பரபாம்' என்று மதுரைக்கு 
நடுவேயல்லவா இருக்கின்றார்கள்? வடக்குக் கோபுர வாசலில் மொட்டைக் கோபுரத்தார் 
என்றால் கிழக்கு வாசலில் மதுரைவீர சுவாமி ஜாங்ஜாங் என்று பொம்மி வெள்ளையம்மாளோடு காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார். இவர்களை எப்படி கிராமத்து தேவதைகளாக ஆக்குவது? பக்கா 
நகரத்தார்கள் அல்லவா இவர்கள்?"
"சரிதான்" என்று ஒத்துக்கொண்டார்.
"இவர்களைப் பார்க்கமுடியுமா?" - இது அடுத்த கேள்வி.
"தாராளமாகப் பார்க்கலாம். பார்க்கமுடியும்."
அந்த அனுபவங்களைக் கேட்டார். விலாவாரியாகச் சொன்னேன்.
பேய்களைப் பற்றியும் அதற்கு முன்னர் கேட்டுக் கொண்டிருந்தார்.
அவர் வருவதற்கு முன்னால் டெலி·போனில் அஷ்டகர்மா பற்றி கேட்டுக்கொண்டிருந்தார்.
சொன்ன விபரங்களைக் கேட்டுவிட்டு அதைப் பற்றி ஒரு டாக்குமெண்ட்டரி செய்யலாம் என்று 
தீர்மானித்தார்.
அஷ்டகர்மா என்றால் என்ன கேட்குமுன் சொல்லிவிடுகிறேன்.....
ஸ்தம்பனம், மோஹனம், ஆகர்ஷணம், மாரணம், பேதனம், வித்வேஷணம், உச்சாடனம், 
வசியம் ஆகியவை.
மாந்திரீகம்.
மேல்விபரங்களுக்கு அகத்தியர் ஆவணத்திற்குள் பார்க்கவும். ஏராளமாக எழுதி
வைத்திருக்கிறேன்.


==============================

VIVASTHAI


விவஸ்தையும் அவஸ்தையும்

ரொம்ப நாளைக்கு முன்னால், கோலாலும்ப்பூர் அன்பர் ஒருவர், "நீங்கள் எப்படி இவ்வளவு எழுதுகிறீர்கள்?", என்று கேட்டார். 

"நான் எங்கே இப்போதெல்லாம் எழுதுகிறேன்? காம்ப்பியூட்டர் கீயையல்லவா தட்டுகிறேன்", என்று சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் சொல்லவில்லை. ஏடாகூடமாக எடுத்துக்கொள்வார்கள்.

ரொம்ப நாளைக்கு முன்னால், மலேசியாவில் நான் ஒரு பிரதிவாதி பயங்கரனாக உலா வந்து கொண்டிருந்த சமயம். 
ஜோகூர் என்னும் மாநிலத்தில் மலேசிய இந்து சங்கத்தைப் பலப்படுத்திக் கொண்டிருந்த சமயம். 
அப்போது கோத்தாத்திங்கி என்னும் ஊரில் இருந்தேன். அங்கு என்னுடைய வீட்டிலேயே சிலருக்கு மிக ஆழமாக இந்து சமயத்தைப் பற்றிச் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தேன். 
மேடையில் சமயச்சொற்பொழிவு ஆற்றுவதும் ஒரு முக்கிய பயிற்சி.

ஒருநாள் Big Bang Theory-யை நம்முடைய 'ஸ்பந்தம்' என்னும் தத்துவத்துடன் ஒப்பிட்டுச் சொல்லிக்கொண்டிருந்தேன்.
அதைப் பற்றி சில கேள்விகளை ஒருவர் கேட்டார். அவர் இந்து சங்கத்தில் முக்கியமான புள்ளி.
"நான் சொன்னேன், "நான் அதை விவரித்துச் சொல்லிவிட முடியும். ஆனால் உங்களால் அதைப் புரிந்துகொள்ளமுடியுமா?"
அவர் மெதுவாகத் தலையை ஆட்டிக்கொண்டார்.

சில மாதங்கள் கழித்து அவர் இன்னோர் இடத்தில் இதே சமாச்சாரத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். அப்போது ஒருவர் அவரிடம் இன்னும் விளக்கம் கேட்டிருக்கிறார். 
அதற்கு அவர் சொன்னார், "நான் விளக்கமாகச் சொல்லிவிடுவேன். உங்களுக்குப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இருக்கிறதா?"
ஒரே அறை. 
கேள்வி கேட்ட ஆளுக்கு அத்தனை ஆவேசம். 
கெட்ட வார்த்தைகளில் வாயாறத் திட்டிவிட்டுச் சென்றாராம்.
'விவஸ்தை' என்றொரு சொல் இருக்கிறது அல்லவா?

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$