Friday 10 June 2011

ஏலம் விட்ட குருவி -#2

ராதாக்கிருஷ்ணன் குருவிக் கதையின் இரண்டாவது பகுதியைக் கேட்டார்.......
எழுதிட்டாப்போச்சு......
பெரிய கம்பசூத்திரமா என்ன?

ஏலத்தில் எடுத்த அபூர்வ பேசும் மைனாக் குருவியைக் கூண்டில் அடைத்துக்கொண்டு பத்திரமாகப் பெருசு வீட்டிற்குக் கொண்டு சென்றது.  ஐயாயிரம் ரூபாய்க் குருவியாயிற்றே!  அட்டேயப்பா! இப்பேற்பட்ட குருவியைக் காட்டி ஊராங்க்ய, ஒறவுமொறெ, எட்டு வட்டகெ, பதுனெட்டுப் பட்டியெல்லாம் காட்டவேண்டும் என்று பெருசு நினைத்தது.  முதலில் ஆத்தாக் கிழவியை அசர வைக்கவேண்டும் என்று அந்த மைனாக் குருவியைக் கூண்டோடு ஆத்தாக் கிழவி இருக்கும் வீட்டுக்கு அனுப்பிவைத்தது.  இரண்டு நாட்கள் ஒன்றும் சத்தத்தையே காணோம். 

"நாமளே போயிப் பாத்துப்பிட்டு வந்துருவோம். வாரபோது கையோட மைனாக் குருவியக் கொண்டாந்துர்வோம்", என்று பெருசு நினைத்தது. உடன் காரியத்தில் இறங்கியது. 

புதுச்சேரி முதல்வர் என்னார் மாதிரி பொதபொதவென்று தொப்பான் தொப்பான் முக்காக்கைச் சட்டையைப் போட்டுக்கொண்டு, அவர் மாதிரியே நெற்றியில் துண்ணூறு பூசி, அவர் மாதிரியே உச்சந் தலையில் துண்ணூறைக் கொட்டிக்கொண்டு புறப்பட்டது.  ஆத்தாக்காரி வீட்டு வாசல் திண்ணையில். நல்லாக் காலைப் பப்பரபாம் என்று நீட்டி வைத்துக்கொண்டு, பாக்கு உரலில் வெற்றிலையைப் போட்டு இடித்துக்கொண்டிருந்தது. 

"என்னடாப்பா, இந்தப் பக்கமா....? ஙோத்தா உசுரோட இருக்காளான்னு பாத்துப்புட்டுப் போகோணும்னுட்டு வந்தியா? அதுனாலதான இன்னம் இந்த ஊருக்கோடித் தோப்புத்தொரவ கைநாட்டுப் போட்டுக் குடுக்காம இருக்கேன்.... நாம்பொத்த புள்ள கொணம் எனக்குத்தானே தெரியும்?"  


"அட கெழவீ! ஒனக்குக் கூறுகெட்டுப் போச்சு. கொஞ்சங்கூட வெதரணயே இல்ல.  நானு ஒரு குருவிய குடுத்தூட்டனே, அதப் பத்தி வெசாரிப்பம்னுட்டுல்ல வந்தேன். பாத்தியா....
எப்புடி நம்ம குருவி?" 

"உக்கூம்...... பெர்ரீய்ய குருவி.... ஊருல நாட்டுல இல்லாத குருவியாக்கும். எல்லாம் எலும்புங்கிலும்புமா சதெப் பத்தே இல்லாம தொத்தலா இருந்துச்சு. கொஞ்சா நஞ்சங் கறியும் நாறுநாறா இருந்துச்சு. இஞ்ச கெடய்க்காத காடயா கவுதாரியா..... அனுப்பிப்புட்டான்  பேரீய்ய்ய மைனாக் குர்ர்ருவீ......?"

No comments:

Post a Comment