Friday 19 August 2011

நவரத்தினக் கற்கள்

என்னிடம் இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டன - நவரத்தினக் கற்களைப் பற்றியும் நவரத்தினக் கல் மோதிரத்தையும் பற்றியது.

நவரத்தினங்கள் எவை? தமிழ், ஆங்கிலத்தில் எப்படி அழைக்கப்படுகின்றன?

கீழே கொடுத்துள்ளேன்:

1.முத்து - pearl
2.மரகதம் - emerald
3.கோமேதகம் - sardonyx
4.மாணிக்கம் - ruby
5.வைடூரியம் - cat's eye
6.வைரம் - diamond
7.பவளம் - coral
8.புஷ்பராகம் - topaz
9.நீலம் - blue sapphire

புஷ்பராகத்தை Yellow saphire என்றும் சொல்வார்கள். புஷ்பராகத்தில் கனக புஷ்பராகம், ரோஸ் புஷ்பராகம் என்றெல்லாம் வகைகள் உண்டு.

சாதாரணமாக நவரத்தின மோதிரத்துக்குரிய கற்கள் மிகச் சிறியவையாக இருக்கும்.

பொதுவாக நவமணி கற்களில் குற்றங்கள் இருக்கக்கூடாது என்பார்கள். அப்படி இருந்தால் ஏதாவது கெடுதலைச் செய்துவிடும் என்பது ஒரு மணிநூல் விதி.
இந்தப் பொடிப் பொடிக் கற்களை வாங்கும்போது யார் அவற்றையெல்லாம் பொறுமையுடன் ஒவ்வொரு கல்லாகப் பரிசோதித்துப் பார்த்து வாங்குகிறார்கள்?
கடைக்காரரே பொறுமை இழந்து விரட்டிவிடுவார்.
சில கற்களைக் கண்டு ரொம்பவும் பயப்படுவார்கள். நீலம் இதில் முதன்மை வகிக்கும். அடுத்தபடியாக வைரம்.
ஹோப், ஆர்லா·ப் போன்ற வைரங்களைப் பற்றி சரித்திரமே இருக்கிறது.  குறையே இல்லாத நவமணிக் கற்களை வைத்து மோதிரத்தைக் கட்டுகிறார்கள் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம்.  அந்த மோதிரத்தின் ஆற்றல் எப்படியிருக்கும்?

அந்தந்த மணிக்குரிய கிரகத்தின் கெட்ட பலன்களை அந்தந்த மணிக்கல் நீக்கிவிடும் என்று நம்புகிறார்கள்.
ஆனால் சில விஷயங்களை யாரும் யோசித்துப் பார்ப்பதில்லை.  ஒரு மணிக் கல் ஏற்படுத்தக்கூடிய பலனை இன்னொரு மணிக் கல் மாற்றி அமைக்கமாட்டாதா? Mutual cancellation of effects என்பது ஏற்படமாட்டாதா?
இந்த மாதிரியெல்லாம் யோசிக்கவே மாட்டார்கள்.
பேசாமல் ஒரு காரியத்தை உருப்படியாகச் செய்யலாம்.......

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

வந்த வினையும் உடனே நீங்கிவிட்டதல்லவா?

4 comments:

  1. நல்ல பதிவு.
    நல்ல தீர்வு.
    வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

    ReplyDelete
  2. You are highly informative .
    Thank You , You are helping us to grow our knowledge.

    B.Rajaram

    ReplyDelete
  3. நல்ல கருத்து. சிலர் நவரத்தினங்களை வைத்து சாமானியர்களை பல காலமாக ஏமாற்றி வருவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. அபரிவிதமான நம்பிக்கை இதற்கு காரணமாக இருக்கலாம். இறையருளைத் தவிர மற்றவை அனைத்தையும் திண்ணமாக நம்புகின்றனர் பலர்.

    Subra

    ReplyDelete